Tuesday, April 8, 2008

Leave Letter

பள்ளிக்கூடத்த கட் அடிச்சிட்டு கிரிக்கெட் பார்கனும்னாலோ, இல்ல எங்கயாவது ஊர் சுத்தனும்னாலோ, இங்லீஷ் work book ல இருக்கிற ஜுரம் வந்த லீவ் லெட்டர காப்பியடிச்சு , அப்பா கையெழுத்தை, நண்பர்கள் யாரையாவது விட்டு போடவைச்சு , நல்லா படிக்கிற பையனா பார்த்து குடுத்துவிடுறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். ஆனா இப்ப இருக்குற பசங்க SMS லயே லீவ் லெட்டர் அனுப்பலாம். ஒருவேளை அனுப்புனா எப்டி இருக்கும்னு யோசிச்சப்ப தோனினதுதான் இந்த லெட்டர்..

Dear mam,
As am suffrg frm fevr , am unbl 2 atttd d class. i reqst u 2 grnt me leav fr 2 days.
thakg u,
urs obedntly,
M. Siva.
( என்ன முடியலயா.......)

Monday, March 31, 2008

கைத்தொழில்

நான் பள்ளியில் படிக்கும்போதேல்லாம் வாரம் இருமுறை கைத்தொழிலுக்கென்று தனி வகுப்புகள் நடத்தப்படும். கூடைப்பின்னுதல், பூ வேலைப்பாடு போன்றவற்றைக் கற்றுத்தருவார்கள். இப்போது எத்தனை பள்ளிகளில் அந்த வகுப்பு உள்ளது என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு பள்ளிக்குச்செல்லும் வாய்ப்புக்கிடைத்தது.

வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் என்ற ஊர் உள்ளது. சுனாமி வந்து "விசாரித்துவிட்டுப்போன " பகுதிகளில் அதுவும் ஒன்று. அந்த ஊரில் புனித மைக்கேல் நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் , பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள்.

மணி அடித்தவுடன் , முண்டியடித்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே, இந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சற்று வித்யாசப்படுகிறார்கள். பள்ளி முடிந்ததும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் ஒரு அருமையான கைத்தொழிலை மாணவர்கள் ஆர்வமுடன் செய்கின்றனர்.



நீங்கள் பார்க்கும் படங்கள், அவர்களின் கைவண்ணத்தில் உருவான வண்ண உறைகள் (covers) . உங்களைப்போலவே ஆச்சர்யப்பட்ட நானும், ஆசிரியர்களிடம் இதைப்பற்றி விசாரித்தேன். மிகவும் எளிய முறையில் இதை தயாரிக்கிறார்கள்.

முதலில், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களை நீருடன் கலந்து ஒரு வாளியில் எடுத்துக்கொள்கின்றனர். பின் மூன்று வாளிகளில் சுத்தமான நீரை நிரப்பிக்கொள்கின்றனர். இங்க்பில்லர் உதவியுடன் வண்ணங்களை எடுத்து சொட்டு சொட்டாக நீர் மட்டும் உள்ள வாளிகளில் விடுகின்றனர். அந்த வண்ணங்கள் நீருக்குள் பரவும்போது , லேசாக ஊதி விடுகின்றனர். பின் சாதாரண வெள்ளை நிற உறைகளை எடுத்து, அந்த நீருள்ள வாளிகளில் அமிழ்த்தி வெளியே எடுக்கும்போது விதவிதமான, அழகழகான வண்ணங்கள் தோன்றுகின்றன. பின் வண்ண உறைகளை காற்றில் உலர்த்துகின்றனர்.

விளையாட்டுப்போல இருப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் இதில் பங்கு கொள்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் சுனாமிப் பேரலையில் தங்கள் உறவுகளையும் , உடைமைகளையும் இழந்தவர்கள். மாந்தோப்புகளிலும், முந்திரிக்காடுகளிலும் அலைந்து திரிந்த இச்சிறார்களை, பள்ளிக்கு கொண்டுவந்து படிப்பின் மகத்துவத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த பள்ளி ஆசிரியர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த கவர்களை நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். முக்கியமாக விழாக்களில் பயன்படுத்தலாம். இந்த உறைகளின் விற்பனையின் மூலம் கிடைக்கும் செல்வம் இந்த மாணவச்செல்வங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது.

வலைப்பூ நண்பர்கள் இதை வாங்க விரும்பினால், அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்புக்கொள்ளலாம். அவரின் மின்னஞ்சல் முகவரி kaviraj94@rediffmail.com .

நம் வீடு மற்றும் அலுவலக விழாக்கள் , இந்த மாணாக்கரின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் திகழட்டும்.


Saturday, March 22, 2008

நேற்று பெய்த மழையில்..

வணக்கம் மக்களே! தலைப்பை பார்த்துட்டு ஏதோ மெகா சீரியல்னு நினைக்காதீங்க.. சரி விஷயத்துக்கு போவோம்.
நேற்று இரவு ஷிப்ட் முடிந்ததும் வெளில வந்து பார்த்தா ஒரே மழை. ரெயின் கோட்டை மாட்டிகிட்டு, வண்டியை எடுத்தேன். திருவனந்தபுரத்த பொருத்தவரைக்கும் 9 மணிக்கெல்லாம் ஊர் அடங்கிடும், 12 மணிக்கு ரொட்டுல ஒரு ஈ, காக்கா இல்ல. மழை சத்தத்துல என் வண்டி சத்தம்கூட எனக்கு கேட்கல.
"ச்சே , என்ன வேலைடா இது, நேரத்துக்கு சாப்பிடமுடியல, நேரத்துக்கு தூங்கமுடியல, இன்னைக்கு புனித வெள்ளி, இன்னைக்குகூட லீவு இல்ல " என்று அலுத்துக்கொண்டு, குழம்பிய மனத்தோடு, மெதுவாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.
எனக்கு முன் சைக்கிளில் ஒருவர் முழுதும் நனைந்தபடி சென்றுகொண்டிருந்தார். சைக்கிளின் பின்புறத்தில் நனையாதபடி சினிமா போஸ்டர்கள் பாலீத்தீன் கவரில் வைக்கப்பட்டிருந்தன. சுவர் தென்படும் இடங்களிலெல்லாம் சைக்கிளை நிறுத்தி, பொறுமையாக பசைத்தடவி ஒட்டிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி, "கொஞ்சம் மழை விட்டபிறகு ஒட்டலாம்ல்ல " என்று கேட்டேன். "இல்ல தம்பி இன்னும் நிறைய இடத்துல ஒட்ட வேண்டியிருக்கு, சனி, ஞாயிறு லீவு நாளு, அந்த நேரத்துலதான் தியேட்டருக்கு கூட்டம் வரும். அதனால விடியுறத்துக்குள்ள இதெல்லாம் ஒட்டனும்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை நகர்த்தினார்.
அவர் சென்ற திசையை சற்றுநேரம் பார்த்துவிட்டு, நானும் நகரத்தொடங்கினேன் தெளிந்த மனத்தோடு.

Sunday, January 20, 2008

தயக்கம்

"வாங்க வாங்க" என்று சிவாவை புன்னகையுடன் வரவேற்றாள் மலர்.

"அப்பா குளிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உட்காருங்க" என்று நாற்காலியை நகர்த்திக்கொடுத்தாள். இருவரும் அவரவர் வேலைகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
"ஒரு நிமிஷம். நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மலர்.
குளித்துவிட்டு வந்த கணேசன், "என்ன சொல்லிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தார்.
"இன்னும் சொல்லல சார். இந்தாங்க இந்த மாத வாடகை " என்று நீட்டீனான்.

"ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. எப்போதான் சொல்லப்போறீங்க?"என்று கோபப்பட,
"ஏம்பா அவரை திட்ரீங்க" என்று சப்போட்டுக்கு வந்தாள் மலர்.

"அது ஒன்னுமில்லைமா எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன டிலீங் இருக்கு அதபத்திதான் கேட்டுக்கிட்டு இருந்தேன்" என்று சாமாளித்தார் கணேசன்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான் சிவா.

"நேர்ல முடியலைன்னா போன்லையாவது சொல்லித்தொலைங்க" என்று அலுத்துக்கொண்டார் கணேசன்.

சமையலறையிலிருந்து மனைவி கமலா அழைக்க , உள்ளே சென்றார் கணேசன்.

"என்னங்க சொல்லிட்டாராமா?" என்று ஆவலுடன் கேட்டார்.

"ஆமா மண்ணாங்கட்டி" சூடானார் கணேசன்.

"ஏன் இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு கொஞ்சம் தயக்கம் அதிகம்" இது கமலாவின் சமாதானம்.

"பின்ன என்னடி, நம்ம பொண்ண லவ் பண்றேன்னு நம்மகிட்ட சொல்லியே 6 மாசம் ஆகிடுச்சு. நம்மளும் சரின்னு சொல்லிட்டோம், அவுங்க வீட்டுலயும் சரின்னுட்டாங்க. ஆனாலும் நான்தான் என் காதல மலர்கிட்ட சொல்லுவேன்னு அடம்பிடிச்சவரு, இன்னும் சொல்லாம காலத்த கடத்தினா நாம என்னதான் பண்றது".

"சரி சரி விடுங்க. நீங்ககூடதான் ரெண்டு வருஷம் என்கிட்ட சொல்ரத்துக்கு பயந்தீங்க. ." என்று கமலா சிரிக்க , கணேசனுக்கு வெட்கம் படர்ந்தது முகத்தில்.

Monday, January 14, 2008

பொங்கலோ .. பொங்கல்..

"பொங்கல் பொங்கி வழியும் காட்சியோடு..பொங்கல் தினச்சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ... என்று சொல்லும்போது அடுத்தச்சேனலுக்கு மாற்றிவிடுகிறார் நண்பர். இப்படி ஒவ்வொரு சேனலாக பார்த்துமுடிப்பதற்குள் இரவு வந்துவிட்டது.. பிறகு என்ன வழக்கம்போல் தூக்கம்தான்.."

ச்சே .. கனவுகூட தூங்குறமாதிரியே வருது.. ஆமாங்க மேல இருக்குறது நாளைக்கு நடக்கப்போகும் விஷயங்கள். எங்கள் அலுவலகத்தில் எல்லோருக்கும் சேர்ந்தார்போல் விடுமுறை கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் தூங்கியே பொழுதை கழித்துவிடுவோம்..


ஆனா பொங்கல் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம்.. நாளைக்கு நாகர்கோவில் அருகில் உள்ள பத்மநாபா அரண்மனையையும் , சுற்றியுள்ள அருவிகளையும் பார்க்கப்போகிறோம்.

மக்களே!!! நீங்களும் சின்னத்திரையில சிக்கிடாம நல்லபடியா பொங்கலை மனிதர்களோடும், கால்நடைகளோடும் கொண்டாடுங்க.. கரும்பு மற்றும் காய்கரிகளை நிறைய வாங்கி, விவசாயிகளுக்கு உதவி செய்யுங்க.. ஊருக்கு வந்திருக்கிற நண்பர்களை பார்த்து நலம் விசாரிங்க.. கோவில்களுக்கு போங்க..
தைமகளின் வருகை, அனைவருக்கும் இனிப்பையும் , இன்பத்தையும் கொண்டுவரட்டும்..
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...




Saturday, January 12, 2008

புத்தாண்டு சபதம்

எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பத்து நாள் நான் ஊருக்கு போயிருந்தேன். ஊரில், ஒருநாள் என் மின்னஞ்சல் பெட்டியை பிரிக்கும்போது புத்தாண்டு சபதம் என்ற பெயரில் மங்களூர் சிவா (மாமா...ஆமா...ஆமா) ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். நானும் ஏதாவது ஜொள்ளு படமா இருக்கும்னு ஆசையா திறந்தேன். ஆனா புத்தாண்டு சபதம் எழுதுன்னு அன்புக்கட்டளை பிறப்பிச்சிருந்தார். என்னையும் மதிச்சு கேட்டதால இதோ எனது புத்தாண்டு சபதங்கள்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( சென்ற வருட அனுபவம்).

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மங்களுர் மாமா படிச்சிட்டு பாராட்டுவார் ங்குற நம்பிக்கைதான்..)

4. படிப்பதற்கு சிரமப்படும் சகோதர, சகோதரிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

5. சென்றவருடம் செய்த தவறுகளை இந்த வருடம் செய்யக்கூடாது. புதிது புதிதாக ஏதாவது தவறு செய்ய வேண்டும்.

புதிதாக புத்தாண்டு சபதம் எழுத நான் அழைக்கும் நண்பர்கள்..

1 தொடுவானம் நம் உள்ளத்தில் (தீபா கோவிந்த்)

2. காலம் ( கோவிக்கண்ணன்)

3. குட்டிப்பிசாசு

4. பாலைத்திணை ( காயத்ரி)

எழுதப்போகும் நண்பர்களுக்கு முன்கூட்டியே எனது நன்றிகள்...

Tuesday, December 25, 2007

அஞ்சலி

அந்த கடலலைக்கு தெரியாது

தான் காலனைச் சுமக்கிறோம் என்று..

அந்த காலனுக்கும் தெரியாது

கணக்கில் எத்தனை சேர்ந்ததென்று...


கடலலையில் கரைந்து,

நிலத்தில் புதைந்துபோன

சகோதர , சகோதரிகளுக்கு

என் கண்ணீர் அஞ்சலி...

Saturday, December 22, 2007

மசால் தோசை

ரத்தினம் நீண்ட நேரமாக சுந்தரத்தை கவனித்துக்கொண்டிருக்கிறார். ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. சுந்தரத்தை இந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. மீண்டும் மீண்டும் அவன் அதே பொல செய்துகொண்டிருக்க பொருமையிழந்தவராய் எழுந்து அவனை சமயலறைக்கு அழைத்துச்சென்றார்.

"ஏம்பா சுந்தரம், ஏன் இப்படி பண்ற" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
"என்ன சார் , என்ன சொல்ரீங்கன்னு புரியலையே" என்று பணிவாக பதிலளித்தான்.

"பின்ன என்னப்பா சாப்பிட வர்ரவங்ககிட்ட எல்லாம் , நம்ம ஹோட்டலில் இல்லாத ஐட்டமா சொல்ர, ஏன் இப்படி பண்ற? உன்னையெல்லாம் வேலைக்கு சேர்த்தேன் பாரு என்னை சொல்லனும்" என்று பொரிந்துதள்ளினார்.


"சார் கோவிச்சுக்காதீங்க.. இதுல ஒரு வியாபார தந்திரம் இருக்கு. அதாவது , இப்ப நான் போய் சாப்பிட வர்ரவங்ககிட்ட என்ன வேணும் னு கேட்டா, அவுங்க ப்திலுக்கு என்ன இருக்குன்னு கேட்கிறாங்க,

இட்லி, தோசை, நெய்ரோஸ்ட், ஊத்தப்பம், பொங்கல், பூரி, சப்பாத்தி, வடை, போண்டா அப்புடின்னு மூச்சு விடாம சொல்லிமுடிச்சதுக்கப்புறம், அவுங்க மசால் தோசை இருக்கான்னு இல்லாத ஒன்ன கேட்கிறாங்க. சாப்பிட வர்ரதுல பத்து பேருக்கு ஏழு பேரு இப்படித்தான் இருக்காங்க.. அதனாலதான் நான் முதல்லையே இல்லாத ஐட்டத்த இருக்குறமாதிரி சொல்றேன். நான் சொல்லிமுடிச்சத்துக்கப்புறம் என்னோட லிஸ்ட்ல இல்லாதத கேட்பாங்க.. அப்ப நம்ம வேலை கொஞ்சம் ஈஸியாயிடுது."
என்று புன்னகையுடன் விளக்கமளித்தான்.

ம்ம்.. கெட்டிகாரன் என்று முதுகில் தட்டி கொடுத்தார் ரத்தினம்.

Tuesday, December 18, 2007

மீண்டும் வாராதோ அந்நாள்...

பதினோரு மணிக்கெல்லாம் அறையை சுத்தம் செய்ய தொடங்கிவிட்டார்கள் செந்திலும், ஜெகனும். கட்டில்களையும், பெட்டிகளையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் தியாகுவும் , கலைஞரும். கார்த்தியும், ராஜு வும் அறைகளுக்குச் சென்று அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர். இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்..


சும்மா இப்படி மசமசன்னு உட்கார்ந்து இருக்காம போய் குளி என்று அதட்டிய அரவிந்த் கையோடு அழைத்தும் சென்றான். குளித்து வரும்போது அறையை அழுக்கு குறைந்த போர்வைகளால் அலங்கரித்திருந்தனர் விமலும், சிவசுவும்.

விஜயகுமார் ஒரு முக்காலியின்மேல் ஒரு பெட்டியை வைத்து பிரித்துக்கொண்டிருந்தான். தாத்தா செந்தில் புதிதாக வாங்கிவந்த ஆடைகளை எடுத்துக்கொடுத்தான். எதுக்குடா இதெல்லாம் என்று உதட்டளவில் சொன்னாலும் , உள்ளுக்குள் பரவாயில்லையே பசங்க நல்லததான் வாங்கியிருக்காங்க என்ற எண்ணம். ஆடைகளை அணிவித்து, அழகுபடுத்தினார்கள். புகைப்படக்காரன் குமார் தயாரானான்.


பெட்டியிலிருந்து பிரித்த கேக்கை மெழுகுதிரியால் அலங்கரித்தனர் கடலை பிரபுவும், பாலாஜியும். கேக்கையும் , என்னையும் வைத்து முதல் புகைப்படம் எடுத்தான் குமார். சீனியர், ஜீனியர் எல்லாரும் வந்துசேர்ந்தனர். புத்தகப்புழுக்கள் சரவணனும், சூசையும் கூட ஆஜரானார்கள். பலியாகப்போற ஆடுபோல் பரிதாபமாய் நின்றேன்.. வாங்கபோகும் அடிகளை நினைத்து முதுகு இப்போதே வலித்தது. நேரமாயிடுச்சு வெட்டுங்க என்று திருநாவுக்கரசு குரல் கொடுக்க.. ரெட்டிகாரு மெழுகுதிரிகளை பற்ற வைத்தார்.



குனிந்து மெழுகுதிரிகளை அணைக்கும்போது படபட வென முதுகில் மொத்தியவர்களில் ராம்பிரகாஷ் ம் ஒருவன். பிறந்தநாள் வாழ்த்துக்களை எல்லோரும் பாட , பக்கத்தில் நின்ற செந்திலுக்கும், ஜெகனுக்கும் முதல் கேக்கை கொடுத்தேன். கால்வாசியை எடுத்துக்கொண்டு மீதியை என் முகத்தில் பூசினார்கள. வந்திருந்த அணைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை சிவசுவும், கலைஞரும் கவனிக்க, சதிஷ் சாப்பிடுவதிலையே குறியாயிருந்தான்.


பரிசுகள் கொடுத்து புகைப்படங்கள் எடுத்தனர். அரவிந்தின் பாட்டிலிருந்து தப்பிக்க cd யிலிருந்து பாட்டு போட்டனர். snake டான்ஸ் பாலாஜின் சிறப்பு நடனம் அரங்கேரியது. பாசக்கார பிள்ளைகள் என்று நான் மெய்சிலிர்த்த நேரத்தில், தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள். தம்பி புது சொக்காவ குடுத்துருப்பா என்று கழட்டி வாங்கிக்கொண்டனர்.

என்னையெல்லாம் அடிச்சு நீ ரவுடின்னு பேர் வாங்கப்போறியான்னு நினைச்சிகிட்டு , அடிங்கடா.. அடிங்க னு போருக்கு தயாரானேன்.. தக்காளி , முட்டை இன்னும் என்னன்னெவோ... ஒன்னுகூட தரையில விழல.. குறிபாத்து அடிக்கிறானுங்க .. அன்பு , அன்புன்னு சொல்லிட்டு வழியுற தக்காளியையும், முட்டையையும் எடுத்து மூஞ்சில பூசுராரு CSC சிவா.. அந்த அழகான மூஞ்ச தனியா குளொசப் ல ஒரு போட்டோ வேற..


காலையில காலேஜ் க்குப் போனதும், டேஸ்காலர் பாசக்கார பசங்க எல்லாம் வந்து போதும் போதும் ங்குற அளவுக்கு குடுத்தாங்க.. நல்லவங்க மாதிரியே பேசி, வலிக்கிறமாதிரி அடிச்ச அண்ணாமலை, அவர் நண்பர் நரிகிருஷ்ணன், ரூபன், அருண், மாமா கார்த்தி , சத்தியப்பிரியன், முகுந்தன், நல்லு, மகேஷ், திரு, gpm, பிரவீன், கரீம், பாலா, ஸ்ரீதர், பட்டி,மணவாளன்....... இப்படி எல்லோரும் என்னருகில் நிற்கிறார்கள் புன்னகையுடன் இந்த புகைப்படத்தில்....

ம்ம்ம்... ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் , உங்களின் வாழ்த்துக்களையும் , கொடுத்த பரிசுகளையும்.. வாங்கிய அடிகளையும் ..அசைபோடுகின்றேன் இந்த புகைப்படங்களின் வழியாக..

மீண்டும் வருமா இதுபொன்றதொரு நாள்....



Thursday, November 29, 2007

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்

150000 இது சென்செக்ஸ் புள்ளிகளின் எண்ணிக்கை அல்ல. வளரும் இந்தியாவின் வயிறு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. ஆம் ,இந்தியாவில் 1997 முதல் 2007 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 150000.

கடன் சுமை, நஷ்டம் இரண்டுமே இன்றைய விவசாயத்தின் முக்கிய அங்கங்களாகிவிட்டன.

எனது சொந்தவூர் நாகை மாவட்டத்தில் உள்ளது. பருவமழையும், காவிரியும்தான் இங்கு விவசாயத்திற்கான முக்கிய மூலங்கள். காவிரி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சில வருடங்களாக பருவமழையும் பொய்த்துவிட்டது. தேவையான நேரத்தில் ஒரு சொட்டு கூட பெய்வதில்லை. நன்றாக கதிர்வரும்போது பேய் மழை பெய்கிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போது உள்ள முக்கிய பிரச்சினை விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வரமறுக்கிறார்கள் என்பதுதான். ஆம் கட்டிட வேலைகளுக்குச்சென்றால் இதைவிட இருமடங்கு வருமானம் கிடைப்பதால் விவசாய வேலைகளை தவிர்த்துவிடுக்கிறார்கள். எனவே பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருக்கின்றன. ( யாராவது டாடா கம்பெனி காரங்ககிட்ட சொல்லுங்கப்பா..)..

இன்னும் கொஞ்சநாட்களில் அரிசி, தக்காளி, கீரை இதையெல்லாம் பெப்சி, கோக் மாதிரி புட்டிகளில் அடைச்சு வெளிநாட்டுகாரங்க நம்மகிட்ட விற்கப்போகிறார்கள்.

சரி இப்ப அதுக்கு என்னங்குறிங்களா? .. விக்ரமன் படத்துல வர்ர மாதிரி ஒரே பாட்டுல எல்லா தரிசு நிலத்தையும் விளைநிலமாகவோ.. இல்ல நஷ்டத்த லாபமாகவோ நம்மால மாத்தமுடியாது. ஏதோ நம்மாள முடிஞ்சது,

வெளியூர்ல, வெளிநாடுகள்ல நல்லா சம்பாதிக்கிற நாம , ஊர்ல இருக்குற நிலத்தையெல்லாம் வித்துடுங்கன்னு அப்பாக்கள டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.

விவசாயத்துக்காக கொஞ்சம் செலவு செய்யலாம்.
வேற ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்க..

Monday, November 26, 2007

சேதி தெரியுமா?

மலையாளத்துல சாக்லேட் னு ஒரு படம் வந்து சக்கைபோடு போட்டுகிட்டு இருக்குங்க. அந்த படத்துல ஒரு புது விஷயத்தை சொல்ராங்க.


அதாவது மகளீர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மட்டும் படிக்கலாம்னு சட்டம் இருக்குதாம்.( நம்ம நாட்டுலதான்...) அதுக்கு கல்லூரி முதல்வரோட அனுமதி மட்டும் இருந்தால் போதுமாம். இதுதான் படத்தோட கரு.


இந்தபுது சட்டத்தோட கருணையால பிரித்திவிராஜ்க்குஅந்த யோகம் கிடைக்குது.
அதுக்கப்ப்புறம் காலேஜ்ல நடக்குற விஷயங்ள், இத வச்சு திரைக்கதையை அமைச்சுருக்காங்க.. மொத்தத்துல படம் நல்லாயிருக்கு.

தமிழக இளைஞர்களின் எதிபார்ப்புக்கு ஏற்றமாதிரி ரெண்டு கதாநாயகிகள் நடிச்சிருக்காங்க. தமிழ்ல சீக்கிரம் எதிபார்க்கலாம். ஆயிரம் ஆண்கள் இருக்குற இடத்துல இருந்துறலாம், ஆனா ரெண்டு பொண்ணுங்க இருக்குகிற இடத்துல இருக்கமுடியாதுங்குறத ( சத்தியமா நான் சொல்லலைங்க..) பிரித்திவிராஜ் படம் முழுக்க அனுபவிக்கிறார்.

ம்ம்.. நமக்குத்தான் குடுத்து வைக்கல வரப்போற பசங்களுக்காவது பயன்படட்டுமேன்னு தான் உங்க எல்லார்கிட்டேயும் இத சோன்னேன்.
உண்மையாவே இப்படி ஒரு சட்டம் இருக்குதான்னு விசாரிச்சுப்பாருங்க..

Thursday, November 15, 2007

ஏமாற்றம்



இந்தமுறையும்

ஏமாந்துபோனேன்,

அருகில் இருந்த ரயில்பெட்டி

நகர்ந்தபோது..

நகர்வது என்னுடையது

என்றெண்ணி..

Monday, November 12, 2007

எவ்வளவோ பண்றோம்.. அழகிய தமிழ்மகன்


தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர் ஒருவருடன் அழகிய தமிழ்மகன் படம் பார்க்கப்போயிருந்தேன். இனிய தளபதி, இதய தளபதி, இளைய தளபதி, டாக்டர் விஜய் அப்புடின்னு பேர் போட்டதுலேருந்து படம் முழுக்க இந்தமாதிரி நிறைய காமெடிகள்.


ஓட்டப்பந்தயத்துல எல்லா மெடலையும் தானே வாங்குற வீரர் விஜய். ஒரு பந்தயத்துல, கூட ஓடுற ஒருத்தருக்காக ( ஸ்ரீமன்) முதலிடத்த விட்டுக்கொடுக்கிறார் விஜய். இத பார்த்தவுடனே உலகத்துலேயே இல்ல இல்ல தமிழ்நாட்டுலேயே பெரிய பணக்காரரோட பொண்ணு கதாநாயகிக்கு இவரு மேல காதல் வந்துடுது. . . .அதுக்காகத்தானே அந்த சீனே..


அப்புறம்தான் படத்தோட கதையே ஆரம்பிக்குது. பின்னாடி நடக்கப்போற சில விஷயங்கள் விஜய்க்கு, முன்னாடியே கண்ணாடி மாதிரி தெரியுது.. ( plz பொருத்துக்கங்க..). அதுனால விஜய் ரொம்ப டிஸ்டர்பு ஆகிறார். மனநல மருத்துவர் ருத்ரன் , இதுல கவலைப்படுறத்துக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்குள்ள ஒரு அபார சக்தி இருக்கு. இப்படி உங்களுக்கு தோன்ற விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா நடக்கும்னு சொல்லிறார். அதேபோல சக்திமானுக்கு (அதாங்க நம்ம விஜய் ) தோனுன ரெண்டு விஷயங்கள் உண்மையாவே நடந்துடுது...


இதுக்கிடையில விஜயோட காதல் வீட்டுக்கு தெரியவந்து எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாங்க. அந்தநேரத்துல விஜய்க்கு இன்னொரு விஷயம் தோனுது. அதாவது கதாநாயகிய இவரே கத்தியால குத்துறமாதிரி. இத யார்கிட்டேயும் சொல்லமுடியாம ஊரைவிட்டு மும்பைக்கு போறாரு.


அங்க போனவுடனே இவரு கண்ணையே இவரால நம்பமுடியல, ஆமாங்க.. அச்சு அசல் இவர்மாதிரியே இன்னொருத்தர், நடு ரோட்டுல பத்துபேர அடிச்சு, துவச்சுகிட்டு இருக்கிறார். ஒரிஜ்னல் டூப்ளீகேட்ட பிடிக்கிறத்துக்காக ஓடுறார், அதுக்குள்ள அவரு ஒரு கார்ல ஏறிப்போயிடுறார். நின்னுகிட்டு இருந்த ஒரிஜ்னல் மேல லாரி மோதிடுது.


அதுக்கப்புறம் நீங்க யூகிச்சமாதிரியே டூப்ளீகேட் சென்னைக்கு போறாரு. இரெயில்ல போகும்போது நமிதாகிட்ட ஜல்சா பண்ணிட்டு, அவுங்க முழிக்கிறத்துக்குள்ள காணாம போயிடுறார். இதெல்லாம் வச்சு இவரு ரவுடின்னு முடிவுக்கு வ்ந்துடாதீங்க. டூப்ளீகேட் பேங்குல வேலை பார்கிறாராம். இவரோட முக்கியமான டயலாக்தான் தலைப்புல நீங்க பார்த்தது, எவ்வளவோ பண்றோம் , இது பண்ணமாட்டோமா?

நாலு நாளா ஒரிஜ்னல தேடி அலைஞ்ச ஷிரேயா, டூப்ளீகேட்ட ஒரிஜ்னல்னு நினைச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறாங்க..( என்னவொரு டிவிஸ்டு பார்த்தீங்களா) ஒருஜ்னலோட டைரிய கண்டுபிடுச்ச டூப்ளீகேட் அவர மாதிரியே நடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தநேரத்துல மும்பையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில ஓசியில வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காங்க ஒரிஜ்னல் விஜய்க்கு. டாக்டர் ஒருமாசத்துக்கு ரெஸ்டு எடுக்கனும், ரிஸ்கு எடுக்ககூடாதுன்னு சொல்றார், ஆனா ரிஸ்கு எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்புடுற மாதிரின்னு சொல்லிட்டு, ஒரிஜ்னல் சென்னைக்கு ஓடிவந்துறார்.
டூப்ளீகேட் ரொம்ப திறமையா அவருதான் ஒரிஜ்னல்னு எல்லாரையும் நம்பவைக்கிறார். அதனால ஒரிஜ்னல எல்லாரும் டூப்ளீகேட்டுன்னு நினைக்கிறாங்க. போதும் போதும் நிறுத்துன்னு சொல்றது காதுல விழுது. இருந்தாலும் விடமாட்டேன்.
கிளைமேக்ஸ்ல ஒரு சண்டை இருக்குதுங்க , ஒருத்தர் காலும் தரையில படாது, ஏர்லயே சண்டை. கடைசியா வாலி பார்முளாவுல டூப்ளீகேட், ஒரிஜ்னல் இல்லைங்குற உண்மையே ஷிரேயா கண்டுபிடிச்சுடுவாங்க. அந்தநேரத்துல கரக்ட்டா ஒரிஜ்னல் கண்ணாடியவுடைச்சிகிட்டு வந்துடுவார். ஒரிஜ்னலுக்கும், டூப்ளீகேட்டுக்கும் சண்டை நடக்கும்போது, டூப்ளீகேட் ஷிரேயாவ கத்தியால குத்திடுவாரோன்னு நாம யோசிக்க டைரக்டர் மாத்தி யோசிச்சிருக்கிறார். அந்த சஸ்பென்ச நீங்களே போய் பாருங்க...எது எப்படியோ படத்தோட கிளைமேக்ஸ் சுபம்ங்க..
பாடல்கள் நல்லாயிருக்கு.. ஆனா எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு..
சக்திமான் சூப்பரா டான்ஸ் ஆடுறாருங்க.. கட்டாயம் போய்ப்பாருங்க..
எவ்வளவோ பண்றோம்.. இது பண்ணமாட்டோமா அப்டிங்கிறீங்களா..
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...


Thursday, November 1, 2007

கடவுளின் சொந்த நாடு II

திருவனந்தபுரம் ஒரு மிதமான தட்பவெப்ப நிலை உள்ள ஒரு இடம். இங்க எப்ப மழை வரும் , எப்டி வரும் னு எலலாம் சொல்லமுடியாது ஆனா ஒரு வாரத்துக்கு ஏழு நாளாவது மழை பெய்யும்.


மழை மாதிரியே இங்க அடிக்கடி போராட்டங்களும் நடக்கும். ஸ்ட்ரைக் அப்புடிங்குற்த இவுங்க "ஹர்த்தால் " னு சொல்ராங்க. எல்லா கட்சிகளுமே ஹர்த்தால் பண்றத்துக்குன்னே தனி ஆளுங்கள அப்பாயின்ட் பண்ணி
வச்சுருக்காங்க.

அரசு தலைமைச்செயலகத்துக்கு வெளில டெண்டு போட்டு இந்த ஆளுங்க தயாரா இருப்பாங்க, ரெடின்னு சொன்னதும் ரொட மறிச்சு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க.


தமிழ் திரைப்படங்களுக்கு இங்க நல்ல வரவேற்பு இருக்கு. புதுப்படம் வந்தாக்கூட டிக்கெட் விலையெல்லாம் நியாயமாதான் இருக்கும். டாக்டர் விஜய் நடித்த போக்கிரி 100 நாள் ஓடிச்சுன்னா பாத்துகங்க.. கோயில் திருவிழாவிலெல்லாம் தெரு முழுக்க ஸ்பீக்கர் கட்டி , " டோலு டோலு தான் அடிகுறான்" னு பாட்டப்போட்டு நம்ம காது கிழியுற அளவுக்கு கத்த விடுவாங்க.

திருவனந்தபுரத்துல முக்கியமா பார்க்கவேண்டிய இடங்கள்,




சுவாமி பத்பநாபா கோவில். பேருந்து நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் இருக்குகிறது








கோவளம் கடற்கரை.
கேரளாவுல இருக்குற கடற்கரைகள் எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும். இந்த கடற்கரைகளை பார்ப்பதற்காகத்தான் வெளிநாட்டினர் நிறைய பேர் வருகிறார்கள்.
சூரியக்குளியல், மணல்குளியல் எல்லாம் நிறைய பார்க்கலாம். இதே போல் சங்குமுகம், வேலி போன்ற கடற்கரைகளும் பார்க்கவேண்டிய இடங்கள்.




திருவனந்தபுரத்துல ஒரு மிருகக்காட்சி சாலையும் , அருங்காட்சியகமும் இருக்கு.
அரிய விலங்குகளை இங்கு பார்க்கலாம்.






திருவனந்தபுரத்துக்கு இன்னொரு சிறப்பு, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம். இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இட்த்தில் உள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள், நம் அப்துல் கலாம் உட்பட இங்குதான் தன் பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
"நைக் அப்பாச்சி" என்ற ராக்கெட்டை தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்துவதற்காக தயார் செய்துகொண்டிருக்கும் படத்தைத்தான் அருகில் பார்க்கிறீர்கள்.



கேரளாவுக்கு சுற்றுலா வந்தீங்கன்னா, கீழே இருக்குற சொற்கள் கொஞ்சம் உதவியா இருக்கும்.


தேனீர் (Tea) :சாயா

சாம்பார் : சாம்பார்
வத்தல்குழம்பு : தீயல்
ரசம் : இரெசம்
பருப்பு : பெருப்பு
மோர்குழம்பு : புளிசேரி.
ஊறுகாய் : அச்சாரம்.
போதும் : மதி
வெங்காயம் : உள்ளீ
சொல் : பறை
கூப்பிடுகிறேன :விளிக்கே
ஆள் : புள்ளி
வேலை : ஜோலி.
இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். இன்னமும் தெரிஞ்சுக்கனும்னா என்கிட்ட டியுஷன் சேருங்க..

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், பொதுவா சொல்லனும்னா திருவனந்தபுரம் ஒரு அருமையான சுற்றுலாத்தலம். நேரம் கிடைக்கும்போது கடவுளிடைய சொந்த நாட்டுக்கு கண்டிப்பா வாங்க..

Tuesday, October 30, 2007

கடவுளின் சொந்த நாடு - 1

கடவுளின்ட சொந்தநாடு என்ட கேரளா' கொஞ்சம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நாம் சொல்வது போல், கேரளாவை கடவுளின் சொந்த நாடு என்கிறார்கள்.

நான் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவனந்தபுரத்துக்கு வந்தேன். கூட வேலை பார்கிற மலையாள நண்பர்களுடன் பேசி, சீக்கிரமே மலையாளம் கத்துக்கலாம்னு நினைச்சேன் ஆனா நடந்ததென்னவோ அவர்களெல்லாம் என்னிடம் பேசி ரொம்ப சீக்கிரமே தமிழ் கத்துகிட்டாங்க.

திருவனந்தபுரம்தான் கேரளாவோட தலைநகரம் னு சொல்லிகிறாங்க, ஆனா அதுக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். தம்பானூர் என்ற




இடத்தில்தான் பேருந்து நிலையமும், இரெயில் நிலையமும் இருக்கின்றன. மழை நேரத்துல இந்த இடத்துக்கு வரனும்னா படகுலதான் வரனும். அவ்வளவு பள்ளமான இடம். ஆன இங்க எவ்வளவுதான் மழை பெய்தாலும் கொஞ்சநேரத்திலேயே தண்ணியெல்லாம் ஓடிடும்.

இங்க ஓடுற பேருந்துகளை பார்த்ததுக்கப்புறம்தான் தமிழ்நாட்டுப் பேருந்துகளோட அருமையே புரிஞ்சுது. தலைநகரத்தோட பேருந்து நிலையத்த பார்த்தீங்கன்னா, மீன் மார்கெட் மாதிரியே இருக்கும், அவ்வளவு (அ)சுத்தமாகவும், சத்தமாகவும் இருக்கும்.


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இங்க இருக்குற எல்லாருக்கும் கொஞ்சம் கொழுப்பு அதிகம். ஆமாங்க சமையலுக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்துறதால கொழுப்பு சேர்ந்துகிட்டே இருக்கு. வந்த புதுசுல கேரளா அரிசியை நினைச்சால பயமா இருந்தது, ஆனா இப்பெல்லாம் சாதரண அரிசி சாதம் எல்லா இடத்துலேயும் கிடைக்குது.


என்னடா இவன் ஒரே குறையா சொல்லிகிட்டு இருக்கானேன்னு நினைக்கிறீங்களா? .. அடுத்த பதிவில் இங்க இருக்குற நல்ல விஷயங்களை பத்தி சொல்லப்போறேன்.

Monday, October 29, 2007

அறிமுகம்

என்னைப்பற்றி எந்தவித அறிமுகமும் கொடுக்காமல் ஏனோதானோ என்றுதான் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் இப்போதுதான் இதன் முக்கியத்துவமும் , வலிமையும் எனக்கு புரிகின்றன.

எனது சொந்தவூர் வேளாங்கண்ணி. தற்போது திருவனந்தபுரத்தில் , ஒரு ஆங்கில பத்திரிக்கையின் தொழில்நுட்ப பிரிவில் வேலைப் பார்கிறேன், இவ்வளவுதாங்க நான்.

வலைப்பதிவுகளை எனக்கு அறிமுகம் செய்த விஜய் அவர்களுக்கும், இதை மேன்படுத்துவதற்கு உதவிய மங்களூர் சிவா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்தனையோ சுவையான செய்திகள், காரசாரமான விவாதங்கள் இத்தகைய வலைப்பதிவுகளில் உலா வருகின்றன. என்னுடைய எண்ணங்களை உங்கள்முன் எதிரொலிக்க இந்தக்கண்ணாடியைப் நான் பயன்படுத்தப்போகிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து முகம் காட்டிச்செல்லுங்கள். அப்படியே என்னையும் கூட்டிச்செல்லுங்கள் உங்கள் வலைப்பயணங்களில்......

நேசமுடன்,

அ.ரூபஸ். (சத்தியமா நான் தமிழ்நாடுதான்)

Friday, October 19, 2007

தொல்லை பேசி



முன் பெஞ்சில் அமர்ந்திருக்கிற நண்பனுக்கு குறுந்தகவலோ, தூரத்தில் இருக்கும் தோழிக்கு புதுப்பாடலின் இசையையோ இனி பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்ப இயலாது.




பள்ளிக்கூடங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் செல் பேசியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.


தலைக்கவசம் அணிய வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து, குட்டையாக குழப்பினார்களே அதுபோல் இல்லாமல், கொஞ்சம் கடுமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தால் நலமாயிருக்கும்.

Sunday, October 14, 2007

உறக்கமும், சோம்பலும்

தூக்கம் என்பது கண்களின் தர்மம்
ஆனால் சோம்பல் என்பது ஒருவகையான தற்கொலை

தூக்கத்தில் சொறிந்து கொள்வது மாதிரி
சோம்பலென்பது ஒரு தற்காலிக சுகம்,

விழித்துப் பார்த்தால் அதுவே ரத்தம் கசியும்
ரணமாகவும வாய்ப்பிருக்கிறது,

நேரத்தை ஒத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிஷத்திலும்
உனது வெற்றி ஒத்திவைக்கப்படுகிறது

நாளை என்று தள்ளிப்போடும் நாளெல்லாம் உன் எதிர்காலம்
இறந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது.

-கவிஞர் வைரமுத்து
("சிற்பியே உன்னை செதுக்குகிறேன்")

Monday, October 1, 2007

காகங்களின் வருத்தம்


மாலைகளுடன் மனிதர்களின் கூட்டம்
காகங்கள் வருந்துகின்றன..
இன்று காந்தியிடம நெருங்க முடியாதென்பதால்...

காந்தி பிறந்தநாள்


அக்டோபர் இரண்டு மகாத்மாவின் பிறந்தநாள். குடிமக்கள் கொண்டாடுகிறார்கள், குடிமகன்கள் திண்டாடுகிறார்கள் மதுக்கடை கட்டாய விடுமுறை என்பதால். அது போகட்டும்.. என்னைக்கவர்ந்த காந்தியின் பொன்மொழிகளில் சில உங்கள் பார்வைக்காக இதோ...


  • Freedom is not worth having if it does not include the freedom to make mistakes .
  • Hate the sin, love the sinner
  • I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent
  • An eye for an eye makes the whole world blind
  • You must not lose faith in humanity. Humanity is an ocean, if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.
  • The weak can never forgive. Forgiveness is the attribute of the strong