Tuesday, December 25, 2007

அஞ்சலி

அந்த கடலலைக்கு தெரியாது

தான் காலனைச் சுமக்கிறோம் என்று..

அந்த காலனுக்கும் தெரியாது

கணக்கில் எத்தனை சேர்ந்ததென்று...


கடலலையில் கரைந்து,

நிலத்தில் புதைந்துபோன

சகோதர , சகோதரிகளுக்கு

என் கண்ணீர் அஞ்சலி...

Saturday, December 22, 2007

மசால் தோசை

ரத்தினம் நீண்ட நேரமாக சுந்தரத்தை கவனித்துக்கொண்டிருக்கிறார். ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. சுந்தரத்தை இந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. மீண்டும் மீண்டும் அவன் அதே பொல செய்துகொண்டிருக்க பொருமையிழந்தவராய் எழுந்து அவனை சமயலறைக்கு அழைத்துச்சென்றார்.

"ஏம்பா சுந்தரம், ஏன் இப்படி பண்ற" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
"என்ன சார் , என்ன சொல்ரீங்கன்னு புரியலையே" என்று பணிவாக பதிலளித்தான்.

"பின்ன என்னப்பா சாப்பிட வர்ரவங்ககிட்ட எல்லாம் , நம்ம ஹோட்டலில் இல்லாத ஐட்டமா சொல்ர, ஏன் இப்படி பண்ற? உன்னையெல்லாம் வேலைக்கு சேர்த்தேன் பாரு என்னை சொல்லனும்" என்று பொரிந்துதள்ளினார்.


"சார் கோவிச்சுக்காதீங்க.. இதுல ஒரு வியாபார தந்திரம் இருக்கு. அதாவது , இப்ப நான் போய் சாப்பிட வர்ரவங்ககிட்ட என்ன வேணும் னு கேட்டா, அவுங்க ப்திலுக்கு என்ன இருக்குன்னு கேட்கிறாங்க,

இட்லி, தோசை, நெய்ரோஸ்ட், ஊத்தப்பம், பொங்கல், பூரி, சப்பாத்தி, வடை, போண்டா அப்புடின்னு மூச்சு விடாம சொல்லிமுடிச்சதுக்கப்புறம், அவுங்க மசால் தோசை இருக்கான்னு இல்லாத ஒன்ன கேட்கிறாங்க. சாப்பிட வர்ரதுல பத்து பேருக்கு ஏழு பேரு இப்படித்தான் இருக்காங்க.. அதனாலதான் நான் முதல்லையே இல்லாத ஐட்டத்த இருக்குறமாதிரி சொல்றேன். நான் சொல்லிமுடிச்சத்துக்கப்புறம் என்னோட லிஸ்ட்ல இல்லாதத கேட்பாங்க.. அப்ப நம்ம வேலை கொஞ்சம் ஈஸியாயிடுது."
என்று புன்னகையுடன் விளக்கமளித்தான்.

ம்ம்.. கெட்டிகாரன் என்று முதுகில் தட்டி கொடுத்தார் ரத்தினம்.

Tuesday, December 18, 2007

மீண்டும் வாராதோ அந்நாள்...

பதினோரு மணிக்கெல்லாம் அறையை சுத்தம் செய்ய தொடங்கிவிட்டார்கள் செந்திலும், ஜெகனும். கட்டில்களையும், பெட்டிகளையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் தியாகுவும் , கலைஞரும். கார்த்தியும், ராஜு வும் அறைகளுக்குச் சென்று அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர். இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்..


சும்மா இப்படி மசமசன்னு உட்கார்ந்து இருக்காம போய் குளி என்று அதட்டிய அரவிந்த் கையோடு அழைத்தும் சென்றான். குளித்து வரும்போது அறையை அழுக்கு குறைந்த போர்வைகளால் அலங்கரித்திருந்தனர் விமலும், சிவசுவும்.

விஜயகுமார் ஒரு முக்காலியின்மேல் ஒரு பெட்டியை வைத்து பிரித்துக்கொண்டிருந்தான். தாத்தா செந்தில் புதிதாக வாங்கிவந்த ஆடைகளை எடுத்துக்கொடுத்தான். எதுக்குடா இதெல்லாம் என்று உதட்டளவில் சொன்னாலும் , உள்ளுக்குள் பரவாயில்லையே பசங்க நல்லததான் வாங்கியிருக்காங்க என்ற எண்ணம். ஆடைகளை அணிவித்து, அழகுபடுத்தினார்கள். புகைப்படக்காரன் குமார் தயாரானான்.


பெட்டியிலிருந்து பிரித்த கேக்கை மெழுகுதிரியால் அலங்கரித்தனர் கடலை பிரபுவும், பாலாஜியும். கேக்கையும் , என்னையும் வைத்து முதல் புகைப்படம் எடுத்தான் குமார். சீனியர், ஜீனியர் எல்லாரும் வந்துசேர்ந்தனர். புத்தகப்புழுக்கள் சரவணனும், சூசையும் கூட ஆஜரானார்கள். பலியாகப்போற ஆடுபோல் பரிதாபமாய் நின்றேன்.. வாங்கபோகும் அடிகளை நினைத்து முதுகு இப்போதே வலித்தது. நேரமாயிடுச்சு வெட்டுங்க என்று திருநாவுக்கரசு குரல் கொடுக்க.. ரெட்டிகாரு மெழுகுதிரிகளை பற்ற வைத்தார்.



குனிந்து மெழுகுதிரிகளை அணைக்கும்போது படபட வென முதுகில் மொத்தியவர்களில் ராம்பிரகாஷ் ம் ஒருவன். பிறந்தநாள் வாழ்த்துக்களை எல்லோரும் பாட , பக்கத்தில் நின்ற செந்திலுக்கும், ஜெகனுக்கும் முதல் கேக்கை கொடுத்தேன். கால்வாசியை எடுத்துக்கொண்டு மீதியை என் முகத்தில் பூசினார்கள. வந்திருந்த அணைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை சிவசுவும், கலைஞரும் கவனிக்க, சதிஷ் சாப்பிடுவதிலையே குறியாயிருந்தான்.


பரிசுகள் கொடுத்து புகைப்படங்கள் எடுத்தனர். அரவிந்தின் பாட்டிலிருந்து தப்பிக்க cd யிலிருந்து பாட்டு போட்டனர். snake டான்ஸ் பாலாஜின் சிறப்பு நடனம் அரங்கேரியது. பாசக்கார பிள்ளைகள் என்று நான் மெய்சிலிர்த்த நேரத்தில், தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள். தம்பி புது சொக்காவ குடுத்துருப்பா என்று கழட்டி வாங்கிக்கொண்டனர்.

என்னையெல்லாம் அடிச்சு நீ ரவுடின்னு பேர் வாங்கப்போறியான்னு நினைச்சிகிட்டு , அடிங்கடா.. அடிங்க னு போருக்கு தயாரானேன்.. தக்காளி , முட்டை இன்னும் என்னன்னெவோ... ஒன்னுகூட தரையில விழல.. குறிபாத்து அடிக்கிறானுங்க .. அன்பு , அன்புன்னு சொல்லிட்டு வழியுற தக்காளியையும், முட்டையையும் எடுத்து மூஞ்சில பூசுராரு CSC சிவா.. அந்த அழகான மூஞ்ச தனியா குளொசப் ல ஒரு போட்டோ வேற..


காலையில காலேஜ் க்குப் போனதும், டேஸ்காலர் பாசக்கார பசங்க எல்லாம் வந்து போதும் போதும் ங்குற அளவுக்கு குடுத்தாங்க.. நல்லவங்க மாதிரியே பேசி, வலிக்கிறமாதிரி அடிச்ச அண்ணாமலை, அவர் நண்பர் நரிகிருஷ்ணன், ரூபன், அருண், மாமா கார்த்தி , சத்தியப்பிரியன், முகுந்தன், நல்லு, மகேஷ், திரு, gpm, பிரவீன், கரீம், பாலா, ஸ்ரீதர், பட்டி,மணவாளன்....... இப்படி எல்லோரும் என்னருகில் நிற்கிறார்கள் புன்னகையுடன் இந்த புகைப்படத்தில்....

ம்ம்ம்... ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் , உங்களின் வாழ்த்துக்களையும் , கொடுத்த பரிசுகளையும்.. வாங்கிய அடிகளையும் ..அசைபோடுகின்றேன் இந்த புகைப்படங்களின் வழியாக..

மீண்டும் வருமா இதுபொன்றதொரு நாள்....