Sunday, September 28, 2008

அவ்வளவு நல்லவரா நீங்க??

அலுவலகத் தோழர் ஒருவருக்கு ஜீன் மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சில நாட்கள் கழித்து, எங்கள் அலுவலகத்துக்கு வழக்கமான, வருடாந்தர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவக்குழு ஒன்று வந்தது. இரத்தம் முதல் இதயம் வரை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.
சென்ற வருடம் போலவே இந்த வருடமும், எல்லோருடைய சோதனைமுடிவுகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆம் எல்லாருக்கும் கொழுப்பு ஏறி இருந்தது. "கொலஸ்ட்ரால கன்ட்ரோல் பண்றதுக்கு, எக்சசைஸ் பண்ணுங்க, பழங்கள் நிறைய சாப்பிடுங்க, எண்ணைப் பலகாரங்கள் சாப்பிடாதீங்க" அப்டின்னு டாக்டர்கிட்டயிருந்து ஏகப்பட்ட அட்வைஸ்.

பெரும்பாலானோர் தலைய ஆட்டிட்டு ஜாலியா வந்துட்டோம். ஆனா அந்த கல்யாண மாப்பிள்ளை மட்டும் ரொம்ப கவலையா இருந்தாரு. ஏன்யா என்னாச்சுன்னு விசாரிச்ச்ப்போ, சுகர் லெவல் பார்டரில் இருப்பதாகவும், கவனமாக இருக்கவேண்டும் என்று டாக்டர் சொன்னதாக சொன்னார்.

அவருடைய ரிப்போர்ட்டை பார்த்தபோது , எல்லாம் நார்மலாகவே இருந்தது. சர்க்கரை அளவு மட்டும் சற்று அதிகமாக இருந்தது. எறக்குறைய எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது. "அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. சாப்பாடு, தூக்கம் இதெல்லாம் சரி இல்லாததால இந்தமாதிரிதான் இருக்கும், கல்யாணமான எல்லாம் சரியாய் போயிடும்" என்று எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தோம். ஆனால் அவர் ஒன்றும் கேட்பதாயில்லை.

" நான் வீட்டுக்கு போன் பண்ணி கல்யாணத்த வேண்டாம்னு சொல்லிரேன். பாவம் அந்த பொண்ணு, அதோட வாழ்க்கையும் வீணாபோயிரும் " அப்புடின்னு வாழ்வே மாயம் கமல் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டார். அன்று இரவே அவருடைய பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் முதலில் சற்று அதிர்ந்தாலும், சுதாரித்துக்கொண்ட அவருடைய அப்பா, உடனே கிளம்பி வருவதாகவும், மனதை குழப்பிக்கொள்ள வேண்டாமென்றும் ஆறுதல் சொல்லிவிட்டு, அடுத்தநாள் இங்கு வந்து சேர்ந்தார்.

மாப்பிள்ளை இன்னும் சோகத்தில்தான் இருந்தார். அவருடைய அப்பா வந்து சில விவரங்களை சொன்னார்," இதோ பாருப்பா, நம்ம வீட்டுல எனக்கோ, உங்க அம்மாவுக்கோ சுகர் கிடையாது. அதுனால ஜீன் வழியா உனக்கு வர்த்துக்கு வாய்ப்பில்லை. உனக்கு சர்க்கரையளவு இப்போ பார்டரில்தான் இருக்கு. அதனால் இது ஒரு எச்சரிக்கைதான். இனிமே எக்சசைஸ், யோகா இதெல்லாம் பண்ணி, ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டா ஒரு பிரச்சினையும் இருக்காது." இதன்பிறகே அவருடைய முகத்தில் சற்று தெளிவு பிறந்தது.
அன்று சாயங்காலமே அவர் போய் யோகா கிளாஸில் சேர்ந்தார். காலையில் வாக்கிங், ரன்னிங், சாயங்காலம் யோகா அப்புடின்னு பயங்கர பிசியாயிட்டாப்புள.. சோறு, சோறுன்னு அலையாம, சப்பாத்தி, ஓட்ஸ் ன்னு பயங்கர மார்டனா மாறிட்டாரு.
மூன்று மாதத்தில 6 கிலோ எடையை குறைச்சி, இப்போ நல்லா சுறுசுறுப்பாயிட்டாரு. எப்புடி இருந்த மோகன் இப்படி ஆயிட்டாரே? ன்னு நாங்க ஆச்சர்யமா பார்க்கிறோம். அக்டோபர் மாதம் அவருக்கு திருமண நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. இப்பவெல்லாம், மணமகனும், மணமகளும் செல்பேசியில் குறைந்தது 1 மணி நேரமாவது பேசுகிறார்கள்.. நல்லாயிருங்க மணமக்களே......

அவரிடம் நாங்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி..... அவ்வளவு நல்லவரா நீங்க???

Wednesday, September 24, 2008

வாழ்த்துக்கள்

வலையுலகத்திற்கு என் அன்பான வணக்கங்கள். காணமல் போன பேனாவை கண்டுபிடிப்பதற்குள் மூன்று மாதங்கள் கரைந்துவிட்டன. இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகள். அதில் முக்கியமானது,
செப்டம்பர் 11 அன்று பங்குச்சந்தை நிபுனரான திரு.மங்களூர் சிவா, பூங்கொடி என்ற நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் தன்வசமாக்கிக்கொண்டார். வாழ்த்துக்கள் சிவா சார்.
தனியா இருந்த போது ஊர், ஊரா போய், வேண்டியவங்க, வேண்டாதவங்கன்னு பாரப்ட்சம் பார்க்காமல், பஜ்ஜியும், சொஜ்ஜியும் தின்னுட்டு வந்த நீங்க, அதேமாதிரி இனிமே எங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பீங்கன்னு நம்புகிறேன்.

நீங்க காலை, மதியம் மற்றும் இரவு வேலைகளில் மட்டும் சமைப்பதாகவும், சமையல் மணம் சுற்றியுள்ள தெருக்களில் பரவுவதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.. உண்மையா சிவா சார்...

உங்கள் இருவரின் இல்லறமும் சிறக்க மீண்டும் என் நல்வாழ்த்துக்கள்....


Sunday, June 1, 2008

சின்ன விஷயம் ஆனா பெரிய சந்தோஷம்..

இரவு நேரத்தில் பேருந்தின் முன்னிருக்கைகளில் அமர்ந்து, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அடிமனதில் ஒரு சிறிய பயம் இருக்கும். கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தோடு வேகமாய் எதிர்வரும் வாகனங்கள், குறைந்த இடைவெளியில் கடந்துபோகும் மகிழ்வுந்துகள், வளைவுகளில் முந்திச்செல்லும் இருச்சக்கரங்கள் என இவையேல்லாம் ஒன்றுசேர்ந்து லேசான பயத்தை உண்டாக்கிவிடும். அந்த சமயங்களில் ஓட்டுநரைப்பற்றி அதிகம் சிந்திப்பதுண்டு. காலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனா ஏனோ இன்றுவரை யாருக்கும் சொன்னதில்லை.




அன்று, வேளை நகரிலிருந்து , திருவனந்தபுரம் நோக்கி பேருந்தில் என் பயணத்தை தோடங்கினேன். மே மாதம் என்பதால் பேருந்து நிரம்பியிருந்தது. இரவு 2 மணியளவில் பேருந்தின் பின்பக்கம் பெரிய சத்தம் கேட்டது. கண்களை திறப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு தூக்கத்தை கலைத்தேன். "பஞ்சர்" என்றார் டிரைவர். சற்றுத்தொலைவில் ஒரு மெக்கானிக் ஷாப் இருப்பதாக ஒரு லாரி டிரைவர் சொன்னார். எல்லாரையும் இறக்கிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு போனார்கள்.

விளக்கு எரிந்துகொண்டிருந்தாலும் , கடையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். "காசு கம்மியா கிடைக்கும் ங்குறதால அரசாங்க பஸ்சுக்கெல்லாம் பஞ்சர் ஒட்ட மாட்டார்கள். வேற பஸ் பாக்க வேண்டியதுதான்" என்று சலித்துக்கொண்டார் சகபயணி ஒருவர். குரல்கேட்டு இருவர் எழுந்தனர். டிரைவர் விஷயத்தை சொன்னதும் உடனே உள்ளே சென்று ஜாக்கி யை எடுத்துக்கொண்டு வந்தனர். கிடுகிடுவென வேலையை ஆரம்பித்தார்கள். ஸ்டெப்னி டயரைப் பார்த்தபோது வழுவழுவென டைல்ஸ் தரை மாதிரி இருந்தது. ஒரு நாற்பது நிமிடங்களில் வேலையை
முடித்துவிட்டனர்.


அப்பாடா என்று பெருமூச்சுவிட்டபடி எல்லோரும் அடித்து பிடித்து பெருந்தில் ஏறினோம். என் அருகில் அமர்ந்திருந்தவர் மட்டும் ஏறவில்லை. அவர் அந்த மெக்கானிக்குகளுடன் பேசிக்கொண்டிருந்தார். கடைசியில் அந்த இருவரின் சட்டைப்பையிலும் ஏதோ ஒரு சிறியத்தோகையை திணித்துவிட்டு, கைகுலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் அழுக்காய் இருந்ததால் அவர்கள் தயங்கினர் , விடாமல் இவர் கைகுலுக்கிவிட்டு வண்டியில் ஏறினார். அவர்களும் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்.


அருகில் அமர்ந்தபிறகு கையில் ஒட்டியிருந்த மசையை ஜன்னல் வழியாக கழுவினார். நான் ஆச்சர்யமுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவராகவே பேச ஆரம்பித்தார், " அது ஒன்னுமில்ல தம்பி, இந்த ராத்திரி நேரத்துல ரொம்ப கஷ்டப்பட்டு பஞ்சர் ஒட்டினாங்க. அவுங்க மட்டும் இல்லைனா நம்ம நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும். அதுனாலதான் அவுங்களுக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன்" என்றார். "ச்சே.. நம்மகூட ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாமே" என்று நினைத்துக்கொண்டேன்.


இடையில் ஒருமணிநேரம் தடைப்பட்டாலும் சரியான நேரத்திற்கு நாகர்கோவில் வந்து சேர்ந்தது பேருந்து. எல்லோரும் கீழே இறங்கிகொண்டிருந்தோம். என் அருகில் அமர்ந்திருந்தவ்ர் இறங்குவதற்கு முன், என்னிடம் விடைப்பெற்றுக்கொண்டு ஓட்டுநரிடம் சென்றார். ஓட்டுநருக்கு கைகொடுத்து, பத்திரமாய் கொண்டுவந்து சேர்த்ததற்காக நன்றி தெரிவித்தார். அவருக்கு பின் இறங்கிய நான் சொல்லலாமா என்று யோசித்தப்படியே நடக்கத் தொடங்கினேன். ஆனால் சொல்லவில்லை சற்றுதூரம் சென்று பின் மீண்டும் திரும்பி வந்து அந்த ஒட்டுநருக்கு நன்றி தெரிவித்தேன். அவரும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். என் அருகில் அமர்ந்து பயணித்தவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் அதற்குள் அவர் கூட்டத்தில் கலந்து காணாமல் போயிருந்தார்.


பின்குறிப்பு: "சரியான ரம்பம்" அப்புடின்னு நீங்க திட்றது என் காதுல விழுது. மேட்டர் என்னன்னா , நல்ல விஷயங்கள பார்க்கும்போது வாய்திறந்து பாராட்டுங்க. அவ்வளவுதான்..... ..

Friday, May 16, 2008

இணைய இல்லறம்

"எப்போ பாத்தாலும் உங்க அப்பா, அம்மா வுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணாதீங்க. நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க"
******************
"கேட்குறீங்க இல்லன்னு சொல்லலை. ஆனா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்ருவீங்க. சம்பளத்தை உங்க அப்பாகிட்ட குடுத்துரீங்க. அதை நான் தப்புன்னு சொல்லலை. ஆனா, நம்ம குழந்தைக்கு ஒரு பால் டப்பா வாங்கனும்னா கூட உங்க அப்பாகிட்டதான் கையேந்த வேண்டியிருக்கு".
******************
"ம்ம். குடுக்குறாரு ஆனா அதுக்குமுன்னாடி ஏன், எதுக்குன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறாரு. சிக்கனமா இருக்க வேண்டியதுதான், ஆனா உங்க அப்பா பண்றது கஞ்சத்தனம்".
***********************
"வயசானவங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, இதையே எத்தனைதடவைதான் சொல்லுவீங்க. என்னோட பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு".
*********************
"நான் ஏன் எங்க அப்பா வீட்டுக்கு போகனும்? , அவுங்க நிம்மதியை கெடுக்கவா?.. என்ன பேச்சு பேசுரீங்க நீங்க?. அப்புறம் என்னத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்டீங்க?"
*********************
"ஆமாங்க நான் பேசுறதெல்லாம் உங்களுக்கு சத்தம் போடுறது மாதிரிதான் இருக்கும். குழந்தைக்காக பாத்துகிட்டுருந்த வேலையையும் விட சொன்னீங்க. இப்ப வீட்டு வேலையையும் பாக்கணும், குழந்தையையும் கவனிக்கனும்னா ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலைக்கு ஒரு ஆளு வைச்சுக்கலாம்னு சொன்னாகூட உங்க அப்பா காதுலையே வாங்கமாட்டேங்குறாரு"
*********************
"ஐயோ! சொல்றத புரிஞ்சுக்குங்க. வேலை செய்யுறத்துக்கு நான் அலுப்பு படலைங்க. குழந்தை தவழ ஆரம்பிச்சுட்டான். ஒவ்வொரு நொடியும் அவனை கவனிச்சுகிட்டே இருக்க வேண்டியிருக்கு. துணி எக்கச்சக்கமா துவைக்க வேண்டியிருக்கு, ஒரு ஆளு துணைக்கு இருந்தா உதவியா இருக்கும்".
*******************
இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?.. நான் பைத்தியம் மாதிரி கத்திகிட்டு இருக்கேன். ஏதாவது பேசுங்க".
*********************
"என்ன செய்யுறதுன்னா?... ஒன்னு நீங்க இங்க வந்து எங்ககூட இருங்க. இல்லைன்னா என்னையும் , குழந்தையையும் உங்ககூட கூட்டிட்டு போயிடுங்க. சரி நேரமாயிடுச்சி குழந்தை முழிச்சுடுவான், போய் சாப்பிட்டு , நல்லா தூங்குங்க, நான் கிளம்புறேன்". என்று வெளிநாட்டில் இருக்கும் கணவனிடம் வெடித்துவிட்டு , Yahoo Messenger ஐ sign out செய்துவிட்டு கிளம்பினார் அந்த இணைய இல்லறத்தின் இல்லத்தரசி.

Friday, April 25, 2008

Inflation னும் உளுந்து வடையும்..

அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கீறீர்களா?... அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ , உளுந்துவடைக்கும் பணவீக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு. அட ஆமாங்க... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க மேற்கொண்டு படிங்க...

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக விஷயம் தொடர்பாக சென்னைக்கு இரயிலில் புறப்பட்டேன். கேரளாவில் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு விடைகளை சரிபார்க்கும் மாணவி, அவருடைய தந்தை, சென்னையில் இருக்கும் பிள்ளைகளைப்பற்றி சத்தமாய் பெருமை பேசிக்கொள்ளும் இரு வயதான நண்பர்கள், RAC யை Confirm செய்ய டிடியாரை எதிர்பார்த்திருக்கும் தம்பதியர், விடுமுறைக்காக சுற்றுலாச்செல்லும் குழந்தைகள் என பெட்டி முழுவதும் சுவாரசியங்கள் நிறைந்திருந்தன.

நாகர்கோயில் தாண்டியதும் ஒருவர் வடை, சமோசா போன்ற திண்பண்டங்களை சுமந்து வந்தார். கொஞ்சம் சூடாக இருந்ததால் எல்லாருமே வாங்கினார்கள். வயதான பெரியவர்களில் ஒருவர் , விற்பவரைப்பார்த்து " என்னப்பா வடை ரொம்ப சின்னதா இருக்கு, இதைப்போய் 2 ரூபாய் என்கிறாயே?" என்று ஆரம்பித்து வைத்தார். உடனே வாங்கிய அனைவரும் அதே புகாரை எழுப்பினார்கள். உண்மையிலேயே வடை சிரியதாகத்தான் இருந்தது.

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு அந்த வியாபாரி " சார், உளுந்து 150 ரூபாய் விக்குது, எண்ணை எக்கச்சக்கமா ஏறி கெடக்குது, விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு. நானும் விலையை ஏத்தி விக்கலாம். ஆனா யாரும் வாங்க மாட்டாங்க.. அதனாலதான் சைஸ கொஞ்சம் கம்மி பண்ணீட்டேன்.. நாட்டோட நிலைமை அப்புடி சார்.." என்று விளக்கமளித்தப்படி பக்கத்து பெட்டிக்கு நகர்ந்தார்.
ஐயா பொருளாதார மேதைகளே ... ...எதாவது சீக்கிரம் பண்ணுங்க.. நிம்மதியா ஒரு வடை கூட வாங்கமுடியல...


Saturday, April 19, 2008

உன்னையெல்லாம் திருத்தமுடியாது...

கபில்தேவோட ICL க்கு போட்டியா, இந்திய கிரிக்கெட் வாரியம் IPL ன்னு பங்காளி சண்டையை ஆரம்பிச்சபோது அது ஒரு பெரிய விஷயமா தெரியல. ஆனா பெரிய பணக்காரர்களிடம் டீம்களை விற்று, விளையாடுபவர்களை ஏலம் விட்டபோது இது விளையாட்டல்ல , வியாபாரம் என்று புரிந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும், ரட்சகன் படத்துல நாகார்ஜுனுக்கு நரம்பு புடைக்குமே , அதுமாதிரி என்க்கும் என் நண்பர்களுக்கும் உடம்பெல்லாம் நரம்பு புடைத்தது. நாமெல்லாம் வாயை திறந்துகிட்டு டிவி பார்க்கிறதுனாலதான் இவங்கல்லாம் இப்படி பண்றாங்க என்று கொதித்தார் ஒரு நண்பர். IPL மேட்ச நாம யாரும் பார்க்ககூடாதுன்னு பேசி முடிவு பண்ணினோம். கிட்டத்தட்ட சபதம்ன்னு வச்சுக்கலாம்.

நாட்கள் ந....க.....ர்....ந்....த....ன. ஏப்ரல் 18 மாலை 6 மணிக்கெல்லாம் எல்லாரும் டிவி ரூமுக்கு வந்தாச்சு. "செம கலர்ஃபுல்லா இருக்குல்ல" இது ஒரு நண்பர். "என்ன கூட்டம் பார்த்தீங்களா" இது நான். " மேட்சு எப்போ ஆரம்பிக்கும் " இது கொதித்து எழுந்தவர். இப்படி நாங்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது , பின்புறத்திலிருந்து யாரோ என் தலையில் குட்டினார்கள். திரும்பிப்பார்ததால் சாட்சாத் என் மனசாட்சியேதான்.. உன்னையேல்லாம் திருத்தமுடியாது என்று மீண்டும் நறுக்கென்று என் தலையில் குட்டிவிட்டு அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கத்தொடங்கியது என் மனசாட்சி...

Tuesday, April 8, 2008

Leave Letter

பள்ளிக்கூடத்த கட் அடிச்சிட்டு கிரிக்கெட் பார்கனும்னாலோ, இல்ல எங்கயாவது ஊர் சுத்தனும்னாலோ, இங்லீஷ் work book ல இருக்கிற ஜுரம் வந்த லீவ் லெட்டர காப்பியடிச்சு , அப்பா கையெழுத்தை, நண்பர்கள் யாரையாவது விட்டு போடவைச்சு , நல்லா படிக்கிற பையனா பார்த்து குடுத்துவிடுறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். ஆனா இப்ப இருக்குற பசங்க SMS லயே லீவ் லெட்டர் அனுப்பலாம். ஒருவேளை அனுப்புனா எப்டி இருக்கும்னு யோசிச்சப்ப தோனினதுதான் இந்த லெட்டர்..

Dear mam,
As am suffrg frm fevr , am unbl 2 atttd d class. i reqst u 2 grnt me leav fr 2 days.
thakg u,
urs obedntly,
M. Siva.
( என்ன முடியலயா.......)

Monday, March 31, 2008

கைத்தொழில்

நான் பள்ளியில் படிக்கும்போதேல்லாம் வாரம் இருமுறை கைத்தொழிலுக்கென்று தனி வகுப்புகள் நடத்தப்படும். கூடைப்பின்னுதல், பூ வேலைப்பாடு போன்றவற்றைக் கற்றுத்தருவார்கள். இப்போது எத்தனை பள்ளிகளில் அந்த வகுப்பு உள்ளது என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு பள்ளிக்குச்செல்லும் வாய்ப்புக்கிடைத்தது.

வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் என்ற ஊர் உள்ளது. சுனாமி வந்து "விசாரித்துவிட்டுப்போன " பகுதிகளில் அதுவும் ஒன்று. அந்த ஊரில் புனித மைக்கேல் நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் , பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள்.

மணி அடித்தவுடன் , முண்டியடித்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே, இந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சற்று வித்யாசப்படுகிறார்கள். பள்ளி முடிந்ததும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் ஒரு அருமையான கைத்தொழிலை மாணவர்கள் ஆர்வமுடன் செய்கின்றனர்.



நீங்கள் பார்க்கும் படங்கள், அவர்களின் கைவண்ணத்தில் உருவான வண்ண உறைகள் (covers) . உங்களைப்போலவே ஆச்சர்யப்பட்ட நானும், ஆசிரியர்களிடம் இதைப்பற்றி விசாரித்தேன். மிகவும் எளிய முறையில் இதை தயாரிக்கிறார்கள்.

முதலில், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களை நீருடன் கலந்து ஒரு வாளியில் எடுத்துக்கொள்கின்றனர். பின் மூன்று வாளிகளில் சுத்தமான நீரை நிரப்பிக்கொள்கின்றனர். இங்க்பில்லர் உதவியுடன் வண்ணங்களை எடுத்து சொட்டு சொட்டாக நீர் மட்டும் உள்ள வாளிகளில் விடுகின்றனர். அந்த வண்ணங்கள் நீருக்குள் பரவும்போது , லேசாக ஊதி விடுகின்றனர். பின் சாதாரண வெள்ளை நிற உறைகளை எடுத்து, அந்த நீருள்ள வாளிகளில் அமிழ்த்தி வெளியே எடுக்கும்போது விதவிதமான, அழகழகான வண்ணங்கள் தோன்றுகின்றன. பின் வண்ண உறைகளை காற்றில் உலர்த்துகின்றனர்.

விளையாட்டுப்போல இருப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் இதில் பங்கு கொள்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் சுனாமிப் பேரலையில் தங்கள் உறவுகளையும் , உடைமைகளையும் இழந்தவர்கள். மாந்தோப்புகளிலும், முந்திரிக்காடுகளிலும் அலைந்து திரிந்த இச்சிறார்களை, பள்ளிக்கு கொண்டுவந்து படிப்பின் மகத்துவத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த பள்ளி ஆசிரியர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த கவர்களை நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். முக்கியமாக விழாக்களில் பயன்படுத்தலாம். இந்த உறைகளின் விற்பனையின் மூலம் கிடைக்கும் செல்வம் இந்த மாணவச்செல்வங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது.

வலைப்பூ நண்பர்கள் இதை வாங்க விரும்பினால், அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்புக்கொள்ளலாம். அவரின் மின்னஞ்சல் முகவரி kaviraj94@rediffmail.com .

நம் வீடு மற்றும் அலுவலக விழாக்கள் , இந்த மாணாக்கரின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் திகழட்டும்.


Saturday, March 22, 2008

நேற்று பெய்த மழையில்..

வணக்கம் மக்களே! தலைப்பை பார்த்துட்டு ஏதோ மெகா சீரியல்னு நினைக்காதீங்க.. சரி விஷயத்துக்கு போவோம்.
நேற்று இரவு ஷிப்ட் முடிந்ததும் வெளில வந்து பார்த்தா ஒரே மழை. ரெயின் கோட்டை மாட்டிகிட்டு, வண்டியை எடுத்தேன். திருவனந்தபுரத்த பொருத்தவரைக்கும் 9 மணிக்கெல்லாம் ஊர் அடங்கிடும், 12 மணிக்கு ரொட்டுல ஒரு ஈ, காக்கா இல்ல. மழை சத்தத்துல என் வண்டி சத்தம்கூட எனக்கு கேட்கல.
"ச்சே , என்ன வேலைடா இது, நேரத்துக்கு சாப்பிடமுடியல, நேரத்துக்கு தூங்கமுடியல, இன்னைக்கு புனித வெள்ளி, இன்னைக்குகூட லீவு இல்ல " என்று அலுத்துக்கொண்டு, குழம்பிய மனத்தோடு, மெதுவாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.
எனக்கு முன் சைக்கிளில் ஒருவர் முழுதும் நனைந்தபடி சென்றுகொண்டிருந்தார். சைக்கிளின் பின்புறத்தில் நனையாதபடி சினிமா போஸ்டர்கள் பாலீத்தீன் கவரில் வைக்கப்பட்டிருந்தன. சுவர் தென்படும் இடங்களிலெல்லாம் சைக்கிளை நிறுத்தி, பொறுமையாக பசைத்தடவி ஒட்டிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி, "கொஞ்சம் மழை விட்டபிறகு ஒட்டலாம்ல்ல " என்று கேட்டேன். "இல்ல தம்பி இன்னும் நிறைய இடத்துல ஒட்ட வேண்டியிருக்கு, சனி, ஞாயிறு லீவு நாளு, அந்த நேரத்துலதான் தியேட்டருக்கு கூட்டம் வரும். அதனால விடியுறத்துக்குள்ள இதெல்லாம் ஒட்டனும்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை நகர்த்தினார்.
அவர் சென்ற திசையை சற்றுநேரம் பார்த்துவிட்டு, நானும் நகரத்தொடங்கினேன் தெளிந்த மனத்தோடு.

Sunday, January 20, 2008

தயக்கம்

"வாங்க வாங்க" என்று சிவாவை புன்னகையுடன் வரவேற்றாள் மலர்.

"அப்பா குளிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உட்காருங்க" என்று நாற்காலியை நகர்த்திக்கொடுத்தாள். இருவரும் அவரவர் வேலைகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
"ஒரு நிமிஷம். நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மலர்.
குளித்துவிட்டு வந்த கணேசன், "என்ன சொல்லிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தார்.
"இன்னும் சொல்லல சார். இந்தாங்க இந்த மாத வாடகை " என்று நீட்டீனான்.

"ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. எப்போதான் சொல்லப்போறீங்க?"என்று கோபப்பட,
"ஏம்பா அவரை திட்ரீங்க" என்று சப்போட்டுக்கு வந்தாள் மலர்.

"அது ஒன்னுமில்லைமா எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன டிலீங் இருக்கு அதபத்திதான் கேட்டுக்கிட்டு இருந்தேன்" என்று சாமாளித்தார் கணேசன்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான் சிவா.

"நேர்ல முடியலைன்னா போன்லையாவது சொல்லித்தொலைங்க" என்று அலுத்துக்கொண்டார் கணேசன்.

சமையலறையிலிருந்து மனைவி கமலா அழைக்க , உள்ளே சென்றார் கணேசன்.

"என்னங்க சொல்லிட்டாராமா?" என்று ஆவலுடன் கேட்டார்.

"ஆமா மண்ணாங்கட்டி" சூடானார் கணேசன்.

"ஏன் இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு கொஞ்சம் தயக்கம் அதிகம்" இது கமலாவின் சமாதானம்.

"பின்ன என்னடி, நம்ம பொண்ண லவ் பண்றேன்னு நம்மகிட்ட சொல்லியே 6 மாசம் ஆகிடுச்சு. நம்மளும் சரின்னு சொல்லிட்டோம், அவுங்க வீட்டுலயும் சரின்னுட்டாங்க. ஆனாலும் நான்தான் என் காதல மலர்கிட்ட சொல்லுவேன்னு அடம்பிடிச்சவரு, இன்னும் சொல்லாம காலத்த கடத்தினா நாம என்னதான் பண்றது".

"சரி சரி விடுங்க. நீங்ககூடதான் ரெண்டு வருஷம் என்கிட்ட சொல்ரத்துக்கு பயந்தீங்க. ." என்று கமலா சிரிக்க , கணேசனுக்கு வெட்கம் படர்ந்தது முகத்தில்.

Monday, January 14, 2008

பொங்கலோ .. பொங்கல்..

"பொங்கல் பொங்கி வழியும் காட்சியோடு..பொங்கல் தினச்சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ... என்று சொல்லும்போது அடுத்தச்சேனலுக்கு மாற்றிவிடுகிறார் நண்பர். இப்படி ஒவ்வொரு சேனலாக பார்த்துமுடிப்பதற்குள் இரவு வந்துவிட்டது.. பிறகு என்ன வழக்கம்போல் தூக்கம்தான்.."

ச்சே .. கனவுகூட தூங்குறமாதிரியே வருது.. ஆமாங்க மேல இருக்குறது நாளைக்கு நடக்கப்போகும் விஷயங்கள். எங்கள் அலுவலகத்தில் எல்லோருக்கும் சேர்ந்தார்போல் விடுமுறை கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் தூங்கியே பொழுதை கழித்துவிடுவோம்..


ஆனா பொங்கல் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம்.. நாளைக்கு நாகர்கோவில் அருகில் உள்ள பத்மநாபா அரண்மனையையும் , சுற்றியுள்ள அருவிகளையும் பார்க்கப்போகிறோம்.

மக்களே!!! நீங்களும் சின்னத்திரையில சிக்கிடாம நல்லபடியா பொங்கலை மனிதர்களோடும், கால்நடைகளோடும் கொண்டாடுங்க.. கரும்பு மற்றும் காய்கரிகளை நிறைய வாங்கி, விவசாயிகளுக்கு உதவி செய்யுங்க.. ஊருக்கு வந்திருக்கிற நண்பர்களை பார்த்து நலம் விசாரிங்க.. கோவில்களுக்கு போங்க..
தைமகளின் வருகை, அனைவருக்கும் இனிப்பையும் , இன்பத்தையும் கொண்டுவரட்டும்..
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...




Saturday, January 12, 2008

புத்தாண்டு சபதம்

எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பத்து நாள் நான் ஊருக்கு போயிருந்தேன். ஊரில், ஒருநாள் என் மின்னஞ்சல் பெட்டியை பிரிக்கும்போது புத்தாண்டு சபதம் என்ற பெயரில் மங்களூர் சிவா (மாமா...ஆமா...ஆமா) ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். நானும் ஏதாவது ஜொள்ளு படமா இருக்கும்னு ஆசையா திறந்தேன். ஆனா புத்தாண்டு சபதம் எழுதுன்னு அன்புக்கட்டளை பிறப்பிச்சிருந்தார். என்னையும் மதிச்சு கேட்டதால இதோ எனது புத்தாண்டு சபதங்கள்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( சென்ற வருட அனுபவம்).

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மங்களுர் மாமா படிச்சிட்டு பாராட்டுவார் ங்குற நம்பிக்கைதான்..)

4. படிப்பதற்கு சிரமப்படும் சகோதர, சகோதரிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

5. சென்றவருடம் செய்த தவறுகளை இந்த வருடம் செய்யக்கூடாது. புதிது புதிதாக ஏதாவது தவறு செய்ய வேண்டும்.

புதிதாக புத்தாண்டு சபதம் எழுத நான் அழைக்கும் நண்பர்கள்..

1 தொடுவானம் நம் உள்ளத்தில் (தீபா கோவிந்த்)

2. காலம் ( கோவிக்கண்ணன்)

3. குட்டிப்பிசாசு

4. பாலைத்திணை ( காயத்ரி)

எழுதப்போகும் நண்பர்களுக்கு முன்கூட்டியே எனது நன்றிகள்...