Friday, April 25, 2008

Inflation னும் உளுந்து வடையும்..

அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கீறீர்களா?... அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ , உளுந்துவடைக்கும் பணவீக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு. அட ஆமாங்க... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க மேற்கொண்டு படிங்க...

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக விஷயம் தொடர்பாக சென்னைக்கு இரயிலில் புறப்பட்டேன். கேரளாவில் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு விடைகளை சரிபார்க்கும் மாணவி, அவருடைய தந்தை, சென்னையில் இருக்கும் பிள்ளைகளைப்பற்றி சத்தமாய் பெருமை பேசிக்கொள்ளும் இரு வயதான நண்பர்கள், RAC யை Confirm செய்ய டிடியாரை எதிர்பார்த்திருக்கும் தம்பதியர், விடுமுறைக்காக சுற்றுலாச்செல்லும் குழந்தைகள் என பெட்டி முழுவதும் சுவாரசியங்கள் நிறைந்திருந்தன.

நாகர்கோயில் தாண்டியதும் ஒருவர் வடை, சமோசா போன்ற திண்பண்டங்களை சுமந்து வந்தார். கொஞ்சம் சூடாக இருந்ததால் எல்லாருமே வாங்கினார்கள். வயதான பெரியவர்களில் ஒருவர் , விற்பவரைப்பார்த்து " என்னப்பா வடை ரொம்ப சின்னதா இருக்கு, இதைப்போய் 2 ரூபாய் என்கிறாயே?" என்று ஆரம்பித்து வைத்தார். உடனே வாங்கிய அனைவரும் அதே புகாரை எழுப்பினார்கள். உண்மையிலேயே வடை சிரியதாகத்தான் இருந்தது.

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு அந்த வியாபாரி " சார், உளுந்து 150 ரூபாய் விக்குது, எண்ணை எக்கச்சக்கமா ஏறி கெடக்குது, விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு. நானும் விலையை ஏத்தி விக்கலாம். ஆனா யாரும் வாங்க மாட்டாங்க.. அதனாலதான் சைஸ கொஞ்சம் கம்மி பண்ணீட்டேன்.. நாட்டோட நிலைமை அப்புடி சார்.." என்று விளக்கமளித்தப்படி பக்கத்து பெட்டிக்கு நகர்ந்தார்.
ஐயா பொருளாதார மேதைகளே ... ...எதாவது சீக்கிரம் பண்ணுங்க.. நிம்மதியா ஒரு வடை கூட வாங்கமுடியல...